கோலாலம்பூர், ஜூன்.09-
உலகளாவிய தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் தொழிலாளர் சந்தையில் ஏற்படும் விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப, திறன் செயல்பாடு, பணியாளர் திறன் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவான AI தயார்நிலை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியாவும், ஐக்கிய அரபு சிற்றரசும் ஒப்புக் கொண்டுள்ளன.
துபாயில் மலேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசின் மனிதவள மற்றும் தொழில் துறை அமைச்சர் டாக்டர் அப்துரஹ்மான் அல் அவார் ஆகியோருக்கு இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
டிஜிட்டல் பணியாளர் கொள்கைகள், தொழிலாளர் இடம் பெயர்வு மற்றும் கல்வி மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் எதிர்கால நோக்கத்திற்கான உத்திகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் மனித வள அமைச்சர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு ஒரு முக்கியமான படியாகும்.
AI செயற்கை நுண்ணறிவு திறன் ஆயத்த நிலையில், தற்போது உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசு நிதி, உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் பொதுச் சேவைத் துறைகளில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது.
தொழிலாளர் மற்றும் தொழில்முறை துறைகளில் தொழிலாளர்கள் மீது AI இன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதில் துடிப்பு மிகுந்த கல்விக் கொள்கை மற்றும் தொழிலாளர்களை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை ஐக்கிய அரபு சிற்றரசு அமைச்சர் வலியுறுத்தினார்.
ஐக்கிய அரபு சிற்றரசின் நிலைப்பாட்டை அமைச்சர் ஸ்டீவன் சிம் ஒப்புக் கொண்டார். மேலும் மலேசியா தற்போது AI சகாப்தத்திற்கான தொழிலாளர்கள் தயார் நிலையைத் தீவிரமாக செயல்படுத்தி வருவதையும், இந்த சந்திப்பின் போது ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்தார்.