கெரிக், ஜூன்.09-
தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்தில் அவர்கள் பயணித்த பேருந்து, பெரோடுவா அல்ஸா காரை மோதுவதற்கு முன்னதாக வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலையில் ஜெலி-கெரிக் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையின் 15 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த புலன் விசாரணையில் கணினி மூலம் வாகனங்களை பரிசோதனை செய்யும் புஸ்பாகோம், மலேசிய சாலை போக்குவரத்து ஆய்வியல் கழகமான மிரோஸ் ( MIROS ) மற்றும் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.