கோலாலம்பூர், ஜூன்.10-
தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமாக அமைந்த பேருந்தை வழிநடத்திய நிறுவனத்திற்குத் தரை பொது போக்குவரத்து அமலாக்க ஆணையமான அபாட் ( APAD ), காரணம் கோரும் கடிதத்தை வெளியிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகாலையில் கிழக்கு மேற்கு சாலையான ஜெலி-கெரிக் சாலையின் 53 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த அந்த பேருந்தை வழிநடத்திய நிறுவனம், வாகனப் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளதா? என்ற தணிக்கை சோதனைக்கு இலக்கிடப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனை நடைபெறும். மிகப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் பலி கொண்ட இந்த பேரிடரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தவறு இழைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்.