நகைக்கடையில் கொள்ளை: இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு 5 ஆண்டுச் சிறை

மலாக்கா, ஜூன்.10-

கடந்த மாதம், மலாக்காவில் உள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடித்தது மற்றும் கடை உரிமையாளரின் மனைவிக்கு காயம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக இ-ஹெய்லிங் வாகன ஓட்டுநருக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் ஒரு பிரம்படித் தண்டனையை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 29 வயது மெல்வின் யென் என்ற அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.

கடந்த மே 22 ஆம் தேதி காலை 11 மணியளவில் மலாக்கா தெங்கா, ஜாலான் ஜாவா, கம்போங் ஜாவாவில் உள்ள தை குவோங் நகைக்கடையில் அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வட்டி முதலையிடம் 2 லட்சம் ரிங்கிட் கடனை வாங்கிய தனது காதலியின் கடனைத் திரும்ப அடைப்பதற்காக நகைக்கடையில் கொள்ளையிட்டதாக அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர், நீதிமன்றத்தில் காரணம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS