கெரிக், ஜூன்.13-
கடந்த திங்கட்கிழமை கிழக்கு மேற்குச் சாலையில் கெரிக்கில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்தில், அந்த பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதாக அதன் ஓட்டுநர் அறிவித்து இருப்பது விரைவில் ஆதாரத்துடன் உறுதிச் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே பிரேக் செயலிழந்து விட்டதா? இல்லையா? என்பது குறித்து அந்த பேருந்து மீது நடத்தப்படும் சோதனையில் திட்டவட்டமாகத் தெரிய வரும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு நாட்காக தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மாலை 5.45 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதால் அதன் வேகத்தைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக அறிவித்து இருந்தார்.
அந்த பேருந்து ஓட்டுநரின் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து புலன் விசாரணையின் மூலம் முழுமையாக ஆராயப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.