ஏர் இந்தியா விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார்

புதுடெல்லி, ஜூன்.13-

இந்தியா, குஜராத், ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் பிரஜைக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே தங்களின் இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் லண்டனுக்குப் புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவர்கள் விடுதியில் மோதி, வெடித்துச் சிதறியது.

லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா, போயிங் டிரிம்லைனர் AI 171 விமானம், மேகானி நகர் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர் என இந்தியா சிவில் விமானப் போக்குவரத்து இலாகா தெரிவித்துள்ளது.

விமானத்தில் 169 இந்தியப் பிரஜைகள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கன்னடியர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் 11A இருக்கையில் அமர்ந்திருந்த பயணியே உயிர்த் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 787-8 டிரிம்லைனர் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய விமான விபத்து என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS