கோலாலம்பூர், ஜூன்.13-
லாவோஸ் நாட்டில் 86 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மலேசியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி ரேப் பாடகர் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விசாரணை செய்து வருவதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கு அந்த ரேப் பாடகரும், அவரின் இரு நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளார்களா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
அந்த மூன்று மலேசியர்கள் கைதானது குறித்து கடந்த ஜுன் 3 ஆம் தேதி வெளியுறவு அமைச்சின் மூலம் தகவல் அளிக்கப்பட்டதாக டான் ஶ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.
அந்த மூவரும், கடந்த மே 27 ஆம் தேதி லாவோஸ், வட்டேய் அனைத்துலக விமான நிலையத்தில் 86 கிலோ போதைப் பொருளுடன் பிடிபட்டனர்.