யூசோப் ரவுத்தர் வழக்கில் ஆருடங்கள் வேண்டாம்: பொதுமக்களுக்குச் சட்டத்துறை அலுவலகம் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூன்.13-

போதைப் பொருள் மற்றும் செயற்கைக் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக ஆய்வியல் உதவியாளர் யூசோப் ரவுத்தருக்கு எதிரான வழக்கில், அவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து இருப்பது தொடர்பில் ஆருடங்களும், அவதூறுகளும் வேண்டாம் என்று பொதுமக்களுக்குச் சட்டத்துறை அலுவலகம் நினைவுறுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் முடிவை, சட்டத்துறை அலுவலகம் மதிப்பதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய காரணங்களை ஏற்றுக் கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

யூசோப் ரவுத்தர் வழக்கு பொது மக்களின் கவன ஈர்ப்புக்குரியது என்பதைச் சட்டத்துறை அலுவலகம் ஒப்புக் கொள்கிறது.

இருப்பினும் வழக்கின் முடிவு குறித்து, குறிப்பாக நீதிமன்றத்தால் கூறப்பட்ட காரணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், ஊகங்கள் அல்லது அவதூறுத் தன்மையிலான அறிக்கைகள், கருத்துகள் வெளியிடப்படுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைச் சட்டத்துறை அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்பது மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த யூசோப் ரவுத்தர் போதைப் பொருள் கடத்தல் மற்றும் இரண்டு செயற்கைத் துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

வழக்கு விசாரணை ஆதாரங்களை முழுமையாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையிலும், சட்டக் கொள்கைகளின்படி, எந்தவொரு வெளிப்புற செல்வாக்கு பயன்படுத்தப்படாமல் சுதந்திரமாக அமைந்ததாகவும் சட்டத்துறை அலுவலகம் கூறியது.

சட்டத்துறை அலுவலகம், அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாக தீர்ப்பின் உள்ளடக்கத்தை மிக ஆழமாக பரிசீலனை செய்து வருவதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் யூசோப் ரவுத்ய்ஹரின் வாதப்படி, போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகள் வைக்கப்பட்டு, அவரைச் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS