கோலாலம்பூர், ஜூன்.14-
சிக்கனக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, மலேசிய ஊடகவியலாளர்களுக்கு ஆசியான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள 50 விழுக்காடு விமானப் பயணக் கட்டணச் சலுகையை அறிவித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
தொடர்புத்துறை அமைச்சின் தகவல் இலாகாவினால் வெளியிடப்படும் ஊடகவியலாளர்கள் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களுக்கு இந்த 50 விழுக்காடு கட்டணக் கழிவுச் சலுகை பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியான் நாடுகளுக்கு 57 வழித்தடங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
மலேசிய ஊடகத்துறையில் பங்காற்றி வரும் ஊடகவியலாளர்களின் சேவையை அங்கீரிக்கும் வகையில் ஏர் ஆசியா இந்த பங்களிப்பை வழங்குவதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புத்துறை அமைச்சும், ஏர் ஆசியாவும் மேற்கொண்டுள்ள வியூக ஒத்துழைப்பு காரணமாக இந்தச் சலுகைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த பயண டிக்கெட்டுக்கான சலுகை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திறக்கப்பட்டுள்ளது. பயணங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களைத் தகவல் இலாகா விரைவில் வெளியிடும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ஹவானா எனப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்கள் தின நிகழ்வில் வரவேற்புரையாற்றிய டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.