பெட்டாலிங் ஜெயா, ஜூன்.14-
தாய்மொழி வேறுபாடுகள் நாட்டின் பன்மைத்துவத்தை ஆதரிக்கும் முக்கியத் தூண்களாகும் என்றும், மலாய் மொழியைத் தேசிய மொழியாக வலியுறுத்துவதுடன் இது கையாளப்பட வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார். இந்த வேறுபாடுகளை மலேசியாவின் தனித்துவமாகக் கருதி, ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மொழியானது சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு எல்லையாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டம் மலாய் மொழியைத் தேசிய மொழியாக அங்கீகரிக்கும் அதே வேளையில், அனைத்து குடிமக்களும் தங்கள் தாய்மொழிகளைப் பயன்படுத்தவும் பாதுகாக்கவும் உள்ள உரிமைகளையும் மதிக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.