கோலாலம்பூர், ஜூன்.15-
அரசாங்கத்தின் கொள்கைகள் இந்திய சமூகத்திடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஏற்பட்ட தகவல் தொடர்பு சார்ந்த பலவீனத்தாலும், ஆதாரமற்ற அவதூறான அறிக்கைகளைப் பரப்புவதாலும், இந்திய சமூகத்தின் மீது அரசாங்கம் அக்கறை காட்டுவதில்லை ஒரு மாயை எழுந்துள்ளது என கெஅடிலான் கட்சி தாம்புன் கிளையின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் ஆர். ஷார்வின் தெரிவித்தார். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் நலனை உறுதிப்படுத்த, கட்டமைக்கப்பட்ட, படிப்படியான, தொடர்ச்சியான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
தீபாவளி உணவுப் பை உதவிக்காக 1.5 மில்லியன் ரிங்கிட்டும், தகன வசதிகள் கட்டுமானத்திற்காக 20 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மித்ரா அமைப்பு 100 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றுள்ளதுடன், தெக்குன், அமானா இக்தியார் மலேசியா ஆகியவை இந்திய சமூகத் தொழில்முனைவோர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, நிதியுதவி வழங்குகின்றன என அவர் சுட்டிக் காட்டினார்.