மலேசிய ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தலைவராகத் திரும்பினார் காரிம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.15-

ஒரு பெரும் திருப்பமாக, மலேசிய ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தலைவராக டத்தோ கரீம் இப்ராஹிம் மீண்டும் தேர்வாகியுள்ளார். இன்று  நடைபெற்ற வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் ஒரு தீர்க்கமான வெற்றியின் அடிப்படையில் அவர் அப்பொறுப்பைக் கைப்பற்றினார். 
 
2015 முதல் 2019 வரை அப்பதவியை வகித்த கரீம், 25 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகக் களமிறங்கிய நடப்பு துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மார்க் வில்லியம் லிங்கிற்கு 14 வாக்குகள் கிடைத்தன. 
 
இதற்கு முன் தலைவராக இருந்த டத்தோ ஶ்ரீ ஷாஹிடன் காசிம், மேலும் ஒரு தவணைப் பதவிக்காகப் போட்டியிடவிருப்பதாக இதற்கு முன் கூறியிருந்தார். எனினும், வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் விலகிக் கொண்டதை அடுத்து, எதிர்பாராத முடிவின் மத்தியில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டது. 
 
திரங்கானு ஓட்டப்பந்தயச் சங்கத்தின் தலைவரான டத்தோ வான் ஹாஷிம் வான் அப்துல்லாவும் ஆரம்பத்தில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தார். இறுதியில் விலகிக் கொண்ட அவர்,  துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு 22 வாக்குகளுடன் வென்றார். 
 
முடிவுகளை மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCM) பொது மேலாளர் ஃபாங் வான் ஹோர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். 
 
உதவித் தலைவர்களாக டத்தோ ஆர். அண்ணாமலை, என். பத்மநாதன் மற்றும் பேராசிரியர் டாக்டர் முகமட் ருஸ்லி அப்துல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
 
 

WATCH OUR LATEST NEWS