லுமுட், ஜூன்.15-
மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள அனைத்து அமைச்சர்கள், மத்திய, மாநில நிலையிலான அரசு உயர் அதிகாரிகள், கொள்கை வகுப்பவர்கள் அனைவரும் அடிக்கடி கள ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மக்களின் ஒவ்வொரு பிரச்சினையும் சிறந்த முறையில் கையாளப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகளில் பழுதடைந்த கழிப்பறைகள், உயர்க்கல்வி நிலையங்களில் இணைய வசதி இல்லாதது போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதிநவீன எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் முன் அடிப்படை உள்கட்டமைப்பு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.