கோலாலம்பூர், ஜூன்.16-
தமது தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் இணைவது சாத்தியமில்லை என்று அறிவித்து இருக்கும் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லிக்கு, அவர் தொடர்ந்து முன்னேறுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில் அமைச்சரவையில் மீண்டும் இணைவது குறித்து தாம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு இன்னும் பதில் அளிக்காமல் இருக்கும் முன்னாள் இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்று தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் கட்சியின் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி மற்றும் கட்சியின் உதவித் தலைவரான நிக் நஸ்மி ஆகியோர் தங்கள் பதவிகளைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து இருவரும் தாங்கள் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் இருவருமே அமைச்சரவையில் மீண்டும் இணைய வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் அண்மையில் அறிவுறுத்தியிருந்தார்.