கோலாலம்பூர், ஜூன்,16-
இம்மாதம் பெட்ரோல் ரோன்95 விலை, இலக்குக்கு உரிய சாமானிய மக்களைப் பாதிக்காத வகையில் அதன் மானியத் தொகை அகற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்த வேளையில் அவ்வகை பெட்ரோல் விலை உயர்த்தப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
பெட்ரோல் ரோன்95 விலைக்கு அரசாங்கம் வழங்கிய வரும் மானிய உதவித் தொகை முற்றாக அகற்றப்படும் என்று கூறப்படுவது உண்மை அல்ல என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.
மாறாக, தற்போதைய விலையான லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கு விற்கப்பட்டு வரும் பெட்ரோல் ரோன்95, பெரும்பாலான சாமானிய மக்களைப் பாதிக்காத அளவிற்கு அதன் விலை நிர்ணயிப்பில் மறுபரிசீலனை செய்யப்படும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
ரோன்95 பெட்ரோல் விலை மறுபரிசீலனை செய்யப்படும் போது, அது 85 முதல் 90 விழுக்காடு மக்களைப் பாதிக்காது என்பதற்குத் தாம் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.