ஆமதாபாத், ஜூன்.17-
ஆமதாபாத் ஏர் – இந்தியா விமான விபத்தில் பலியான 99 பேரின் உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காண்பதற்காக, டி.என்.ஏ. எனப்படும் மரபணு மாதிரி எடுக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்தவர்கள் என அவர்களின் 250 உறவினர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இதில், 99 பேரின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், 64 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ன. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து எப்.டி.ஆர்., எனப்படும், விமானத் தரவு ரெக்கார்டர் மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய் பிரிவு தெரிவித்துள்ளது.
‘காக்பிட்’ எனப்படும், விமானி அறையில் இருந்த, ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை அதிகாரிகள் ஏற்கனவே உறுதிச் செய்திருந்தனர். இதில், விபத்திற்கு முன் விமானி மற்றும் துணை விமானியின் குரல் பதிவாகி இருக்கும் என்பதால், விபத்திற்கானக் காரணத்தைத் துல்லியமாக அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.