தைப்பிங், ஜூன்.18-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பேரா, சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மரணம் விளைவித்தக் குற்றத்திற்கான டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவருக்கு தைப்பிங் உயர் நீதிமன்றம் இன்று 8 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
அத்துடன் அந்த லோரி ஓட்டுநருக்கு 80 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
தனக்கு எதிராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுங்கை சிப்புட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி லோரி ஓட்டுநரான 38 வயது Y. வெற்றிவேல் செய்து கொண்ட விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ருவேனா முகமட் நுர்டின் தள்ளுபடி செய்தார்.
குற்றம் இழைத்த லோரி ஓட்டுநர், தண்டிக்கப்பட வேண்டிய நபரே என்று உயர் நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.