பினாங்கில் சொத்துடைமைகளை வாங்குபவர்கள் அனைவருக்குமே விலையில் 5 விழுக்காடு தள்ளுபடி

ஜார்ஜ்டவுன், ஜூன்.18-

பினாங்கு மாநிலத்தில் இன்னும் விற்கப்படாமல் இருக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகத் தளங்களை வாங்குகின்ற அனைவருக்குமே நடப்பு விலையில் 5 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று பினாங்கு மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அதன் முதலமைச்சர் சோவ் கோன் யோவ் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்த 5 விழுக்காடு விலை கழிவு வழங்கப்படும் என்ற முடிவு மாற்றப்பட்டு, அனைவருக்குமே இந்தச் சலுகை வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மடானி சொத்துடைமை பிரச்சாரத்தின் கீழ் வழங்கப்படும் இந்தச் சலுகை இன்று முதல் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் என்று சோவ் கோன் யோவ் அறிவித்தார்.

இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே 5 விழுக்காடு விலை கழிவு வழங்கப்படும் என்று பினாங்கு அரசாங்கம் இதற்கு முன்பு வெளியிட்ட அறிவிப்புக்கு பலத்த கண்டனக் கணைகள் பாய்ந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக சோவ் கோன் யோவ் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS