டத்தோஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் உட்பட பலர் இறுதி மரியாதை

கோலாலம்பூர், ஜூன்.18-

மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ஜி. பழனிவேலின் நல்லுடலுக்கு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஜாஹிட் ஹமிடி இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.

பங்சாரில் உள்ள பழனிவேலின் வீட்டிற்கு மாலையில் நேரில் வருகை புரிந்த பாரிசான் நேஷனலின் தலைவருமான அஹ்மாட் ஸாஹிட், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன், மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பரமணியம், அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ எஸ். உமாராணி உட்பட மஇகா தலைவர்கள் மற்றும் இயக்கத் தலைவர்கள் பழனிவேலின் பிரேதப் பெட்டியில் மாலை அணிவித்தும், மலர் வளையல் சாற்றியும் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

துணைப்பிரதமர் அஹ்மாட் ஸாஹிட், பழனிவேலின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.

76 வயதான முன்னாள் இயற்கை வளம் மற்றும் சூற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல், நேற்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டார்.

தவிர மஇகா உதவித் தலைவர் டத்தோ T. முருகையா, மற்றொரு உதவித் தலைவரான டான்ஸ்ரீ இராமசாமி, முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ B. சகாதேவன், லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா. இராமலிங்கம், மஇகா ஊடகப் பிரிவு பொறுப்பாளர் எல். சிவசுப்பிரமணியம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தியவர்களில் அடங்குவர்.

கணவரை இழந்து துயருற்று இருக்கும் டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேலிற்கு துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் பிரமுகர்கள் ஆறுதல் கூறியதுடன் தங்களின் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டனர்.

நாளை வியாழக்கிழமை பொது மக்களின் அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்கிற்குப் பிறகு பழனிவேலின் நல்லுடல் பிற்பகல் 3 மணியளவில் செந்தூலில் தகனம் செய்யப்படவிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS