கோலாலம்பூர், ஜூன்.19-
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு தொடர்பில் சுகுக் நிதியில் முறைகேடுகள் புரியப்பட்டது தொடர்பில் டான்ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்ட பிரமுகர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று மூன்றாவது முறையாக வாக்குமூலம் பதிவு செய்ய முனைந்துள்ளது.
பண்டார் தாசேக் செலத்தானில் உள்ள அந்த டான்ஸ்ரீ இல்லத்திற்கு இன்று காலை 9.09 மணியளவில் எஸ்பிஆர்எம் விசாரணை அதிகாரிகள் வருகை தந்தனர். டொயோட்டா வியோஸ் வாகனத்தில் வந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள், நேரடியாக அந்த டான்ஸ்ரீ இல்லத்திற்குச் செல்ல இயலவில்லை.
அந்த டான்ஸ்ரீ இல்லத்தைச் சுற்றியும் உதவி போலீஸ்காரர்கள் பாதுகாப்பு அமைக்கப்பட்டு இருந்ததால், அவர்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே இல்லத்திற்குள் அதிகாரிகள் நுழைந்தனர்.
நெடுஞ்சாலை நிர்மாணிப்பில் நிகழ்ந்த மிகப் பெரிய முறைகேடு என்று வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் எஸ்பிஆர்எம் இதுவரை 14 கோடியே 30 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது.