எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் டிஎன்ஏஏ அடிப்படையில் டத்தோஸ்ரீ நஜீப் விடுவிப்பு

கோலாலம்பூர், ஜூன்.20-

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 27 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவ்வழக்கிலிருந்து டிஎன்ஏஏ அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டத்தோஸ்ரீ நஜீப் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், சில காரணங்கள் அடிப்படையில் அவர் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் நீதிபதி கே. முனியாண்டி தனது தீர்ப்பை அளித்தார்.

இந்த வழக்கை தொடர்வதற்கு தற்போது அரசு தரப்பு ஆற்றலைக் கொண்டுள்ளதா? அல்லது ஏற்புடைய ஒரு காலக் கட்டத்தில் வழக்கைத் தொடர்வதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளதா? என்பதற்கு எந்தவோர் அறிகுறியும் தென்படாத நிலையில், நஜீப்பைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலைச் செய்வதாக நீதிபதி முனியாண்டி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் சூழ்நிலைகள், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக உள்ளன. இதன் மூலம் இன்றைய நிலவரப்படி, அரசு தரப்பு வழக்குத் தொடரத் தயாராக இல்லை என்பது போல் தோன்றுகிறது என்று நீதிபதி தனது சுருக்கமான தீர்ப்பில் கூறினார்.

WATCH OUR LATEST NEWS