சிப்பாங், ஜூன்.20-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதல்வியும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான நூருல் இஸா குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துக்களைப் பதிவேற்றம் செய்ததாக ஆடவர் ஒருவர் சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
48 வயது ருஸ்லான் மாட் அலி என்ற அந்த நபர் நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டன. அந்த நபருக்கு எதிராக மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை தனது முக நூலில், நூருல் இஸா குறித்து அருவறுக்கத்தக்க, நாகரீகமற்ற ஆபாசக் கருத்துகளை அந்த நபர் பதிவேற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.