டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவர்

கோலாலம்பூர், ஜூன்.20-

அரச மலேசிய போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜுன் 22 ஆம் தேதி பணி ஓய்வு பெறும் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்குப் பதிலாக அப்பொறுப்புக்கு முகமட் காலிட் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


புதிய ஐஜிபி.யின் பதவிக் காலம், 2025 ஆம் ஆண்டு ஜுன் 23 ஆம் தேதி தொடங்கி, 2027 ஆம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதான முகமட் காலிட் இஸ்மாயில், பணி ஓய்வு பெற்ற நிலையில் மூன்று ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் போலீஸ் படையின் உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பேரா, கோல கங்சார், மனோங்கில் பிறந்து வளர்ந்தவரான முகமட் காலிட் இஸ்மாயில், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார்.

1986 ஆம் ஆண்டு போலீஸ் படையில் பயிற்சி இன்ஸ்பெக்டராக கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் தனது பணியைத் தொடங்கிய முகமட் காலிட் இஸ்மாயில், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவிலும், கோம்பாக் மாவட்ட போலீஸ் நிலையத்தின் சிறப்புப் பிரிவிலும், புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவிலும், புக்கிட் அமான் பாதுகாப்புப் பிரிவிலும், லண்டனில் மலேசியத் தூதரகத்தில் உயர் போலீஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

தவிர பகாங் மாநில போலீஸ் தலைமையத்தின் சிறப்புப் பிரிவிலும் புக்கிட் அமானில் துணைத் தலைமை இயக்குநராகவும், புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் இயக்குநராகவும் முகமட் காலிட் இஸ்மாயில் சேவையாற்றியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS