புத்ராஜெயா, ஜூன்.20-
இன்று நாடு முழுவதும் செகோலா அங்காட் மடானி எனப்படும் 1,000 மடானி பள்ளித் தத்தெடுப்புப் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். இந்தத் திட்டத்திற்கு அரசு தொடர்புடைய நிறுவனங்கள், அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை வழங்கிய அபார ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கல்வித் துறையில் தனியார் துறையின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், 117 அரசுதுறை நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கல்வி இடைவெளியைக் குறைப்பதற்கான நீண்ட கால ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்துள்ளதாக புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் பிரதமர் அன்வார் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.