கோலாலம்பூர், ஜூன்.21-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட்டின் 27 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான பணமோசடி வழக்கில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு வழிவகுத்த ‘குறைபாடுள்ள வழக்கு விசாரணை’ என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது மலேசிய சட்டத்துறை. “இந்தத் துறை ‘குறைபாடுள்ள வழக்குகளை நடத்துகிறது’ என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று சட்டத்துறை ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி, வழக்கின் நிச்சயமற்ற கால அவகாசமானது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீடித்த சுமையை ஏற்படுத்தியதால், நஜிப்பின் டிஎன்ஏஏ விண்ணப்பத்திற்கு கடந்த வாரம் அனுமதி அளித்தார். வழக்கு விசாரணையின் ஒருமைப்பாட்டை உறுதிச் செய்வதற்காக தாமதம் ஏற்பட்டது என்றும், அனைத்து முக்கிய ஆவணங்களும் திரட்டப்பட்டவுடன் அது மீண்டும் தொடங்கும் என்றும் சட்டத்துறை மேலும் கூறியது.