கோலாலம்பூர், ஜூன்.21-
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பிரச்னையையும் இதர சமூகப் பிரச்சினைகளையும் கையாள, இயங்கலைச் சிகிச்சையும் ஆதரவு சேவைகளையும் வழங்குமாறு இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹான்னா இ பரிந்துரைத்துள்ளார். வழக்கமான நேருக்கு நேர் கலந்தாலோசனைகள் குறைவான செயல்திறன் கொண்டவை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இஃது ஒரு புதிய அணுகுமுறை என்றும், இயங்கலைச் சிகிச்சையின் அடையாளம் தெரியாதத் தன்மை இளைஞர்கள் உதவி பெறுவதற்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு ‘இரண்டாவது வாய்ப்பு எனும் கொள்கை’ தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.