கேஎல்ஐஏவின் ஏரோடிரேன் சேவை ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கும்

சிப்பாங், ஜூன்.21-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துடன் இணைக்கும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏரோடிரேன் எனப்படும் தானியங்கி இரயில் சேவை வரும் ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் செயல்படத் தொடங்கும்.

அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், விரைவில் நிறைவடையும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி எல்லாம் சீராக நடந்தால், ஜூலை 1 ஆம் தேதி ஏரோடிரேன் சேவை மீண்டும் தொடங்கும்.

1998 முதல் கேஎல்ஐஏவில் உள்ள போக்குவரத்து கட்டமைப்பிற்கு முதுகெலும்பாக விளங்கிய இந்த இரயில் சேவை, சில தொழில்நுட்பக் கோளாறினால் 2023 -ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை அமைச்சர் சுட்டினார்.

அனைத்துலக பயணங்களை இலகுவாக்க கேஎல்ஐஏ 1 மற்றும் செயற்கைக்கோள் முனையம் இடையே அதிகபட்சமாக 270 பயணிகள் பயணிக்கக்கூடிய மூன்று ரயில்கள் செயல்படும்.

பகல் முழுவதும் இரண்டு ரயில்கள் இயக்கப்படும், ஆனால் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு ரயில் மட்டுமே செயல்படும்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஏரோடிரேன் சேவை முறிந்த பிறகு தொடங்கப்பட்ட பேருந்து சேவைகள், மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என கேஎல்ஐஏ 1-யில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS