தமிழ் சினிமாவின் இன்றும் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்று படையப்பா. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரு. 58 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடியை பாக்ஸ் ஆபிஸில் கடந்த திரைப்படமும் இதுவே ஆகும். இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, ரமேஷ் கண்ணா, ராதாரவி, லட்சுமி என பலரும் நடித்திருந்தனர்.
ஆனால், இப்படத்தில் ரஜினிக்கு நிகராக வில்லியாக நடித்து அசத்தியிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு அடையாளமாகவே மாறிவிட்டது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரங்களில் நீலாம்பரியும் ஒன்று.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் படையப்பா படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்து ரம்யா கிருஷ்ணன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
“படையப்பா படத்தில் எனக்கு தேர்வு இருந்திருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பேன். ஏனெனில் ரஜினிக்கு வில்லியாக நடிப்பதற்கு யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். படத்தில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு செய்யும் போதெல்லாம், படப்பிடிப்பில் இருந்தவர்கள் நீங்கள் கொஞ்ச நாட்கள் சென்னைக்கு வராமல் இருங்கள் என என்னிடம் சொன்னார்கள். அதே போல் படம் வெளியான போது நான் சென்னையில் இல்லை” என அவர் கூறியுள்ளார்.