38 ஆண்டு காலத்தில் அரசியலில் ஈடுபட்டதில்லை: புதிய ஐஜிபி கூறுகிறார்

புத்ராஜெயா, ஜூன்.23-

அரச மலேசிய போலீஸ் படையில் தாம் இணைந்த 38 ஆண்டு காலத்தில், தாம், அரசியலில் ஈடுபட்டதில்லை என்று புதிய ஐஜிபி டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

நாட்டின் போலீஸ் படைத் தலைவராக இன்று தனது பணியைத் தொடங்கியுள்ள காலிட், தாம் பிகேஆர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதை அதன் பொதுச் செயலாளர் ஃபுஸியா சால்லே தெளிவுப்படுத்தியிருப்பது, வெள்ளிடை மலையாகும் என்று காலிட் விளக்கினார்.

போலீஸ் படையில் தம்முடைய 38 ஆண்டு கால வரலாற்றில் எந்தச் சமயத்திலும் அரசியல் ஈடுபாட்டைக் கொண்டிருந்தது இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

போலீஸ் படையுடன் இணைந்து தங்கள் கடமையை ஆற்றி வருகின்ற ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தாம் கொண்டு இருப்பதால் இந்த விவகாரத்தை விளக்குவதற்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாக காலிட் விளக்கினார்.

நாட்டின் போலீஸ் படையின் துணைத் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ அயோப் கான், புதிய ஐஜிபி.யாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில் பணி ஓய்வு பெற்ற ஒருவரைப் புதிய ஐஜிபியாக நியமித்தது குறித்து வருகின்ற விமர்சனங்கள் தொடர்பில் காலிட் கருத்துரைத்தார்.

இன்று உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் காலிட் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS