புதுடெல்லி, ஜூன்.23-
‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம், அனைத்துலக அளவில் இயக்கி வரும் 19 வழித்தட விமானங்களின் எண்ணிக்கையைத் தற்காலிகமாக குறைக்க உள்ளதாகவும்; மூன்று வழித்தடத்தில் விமான சேவைகளை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், அனைத்துலக அளவில் இயங்கி வரும் பெரிய விமானங்களை 15 சதவீதம் குறைப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது 19 அனைத்துலக வழித்தடங்களில் இயக்கி வரும் 118 வாராந்திர சிறிய விமானங்களை 5 சதவீதம் அளவுக்குத் தற்காலிகமாக குறைத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், பெங்களூரு – சிங்கப்பூர், புனே – சிங்கப்பூர் மற்றும் மும்பை – மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா ஆகிய மூன்று வழித்தட சேவைகளை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. உள்நாட்டு சேவையான டில்லி – பெங்களூரு, டில்லி – மும்பை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களின் சேவையும் குறைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என ஏர் – இந்தியா தெரிவித்துள்ளது.