தலைமை நீதிபதி பதவிக்கால நீட்டிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை

கோலாலம்பூர், ஜூன்.23-

தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தனது பதவிக்கால நீட்டிப்பு குறித்தும், மற்ற இரண்டு நீதிபதிகளின் பதவிக்கால நீட்டிப்பு குறித்தும் எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம், மற்றும் நீதித்துறையில் இரண்டாவது உயர் பதவியை வகிக்கும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் ஆகியோரே அந்த இருவர் ஆவர்.

ஒன்பது பேரால் எழுதப்பட்ட “மலேசியாவில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் நடைமுறை” என்ற புத்தகத்தை இன்று வெளியிட்ட பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தெங்கு மைமூன், தமது பதவி கால நீட்டிப்பு குறித்து”எந்த செய்தியும் இல்லை என்றார்.

நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் முதல் பெண்மணியான தெங்கு மைமுன், வரும் ஜூலை முதல் தேதி கட்டாய பணி ஓய்வு பெற உள்ளார். ஜூலை 2 ஆம் தேதி அவருக்கு 66 வயது நிறைவடைகிறது.

அபாங் இஸ்கந்தர், ஜூலை 2 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார், அதே நேரத்தில் நளினி ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்டாய ஓய்வு வயதை அடைகிறார்.

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 125 ஆவது பிரிவின் கீழ், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் 66 வயது வரை பணியாற்றலாம். மாமன்னரின் ஒப்புதலுக்கு உட்பட்டு அவர்களின் பதவி காலம் மேலும் ஆறு மாத நீட்டிப்புக்கான வாய்ப்பும் உள்ளது.

WATCH OUR LATEST NEWS