சையிட் சாடிக் மேல்முறையீட்டு வழக்கில் நாளை புதன்கிழமை தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூன்.24-

நம்பிக்கை மோசடி வழக்கில் சிறை மற்றம் பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்ட மூடா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் நாளை புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.

டத்தோ அஹ்மாட் ஸைடி இப்ராஹிம் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர், காலை 9.00 மணிக்குத் தங்கள் தீர்ப்பை வழங்கவிருக்கின்றனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி அரசு தரப்பினரும், சையிட் சாடிக் வழக்கறிஞரும் தங்கள் வாதத் தொகுப்பைச் சமர்ப்பித்தனர்.

நம்பிக்கை மோசடி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், சையிட் சாடிக்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் அவருக்கு 2 பிரம்படித் தண்டனை விதிக்க உத்தரவு மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதம் விதித்தது.

இத்தண்டனையை எதிர்த்து, முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான சையிட் சாடிக், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS