புதுடெல்லி, ஜூன்.24-
அண்மையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி விமான விபத்து விசாரணை ஆணையத்திலேயே ஆய்வு செய்யப்படும் என இந்தியாவின் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதற்கானக் காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி எனப்படும் விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது. பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டி என்ற கருவியில், விமானியின் குரல் உட்பட அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்படும்.
விபத்து நேரும் போது, அது குறித்த விபரங்களை விமானி அதில் பதிவு செய்வார். இதன் வாயிலாக விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய முடியும். பி.ஜே மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. கருப்புப் பெட்டி ஆய்வு செய்யப்பட வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல் பரவியது.
இந்நிலையில் கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெறும் வதந்தி என இந்தியாவின் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும். விசாரணை இந்திய அதிகார வரம்பிற்குள் உறுதியாக உள்ளது. கருப்புப் பெட்டி தரவுகளை மீட்பது மிகவும் தொழில்நுட்ப ரீதியான விஷயம். ஏ.ஏ.ஐ.பி எனப்படும் விமான விபத்து விசாரணை முகமை ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி முடித்த பிறகு, விபத்திற்கான காரணம் தெரியவரும் என அவர் குறிப்பிட்டார்.