கோலாலம்பூர், ஜூன்.24-
அரசாங்கச் சேவைகளுக்கான நாட்டின் ஒற்றை இலக்க நுழைவாயிலாகச் செயல்படும் மைகோவ் மலேசியா திறன்பேசி செயலி, அடுத்த மாதம் தொடங்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
நாட்டின் அரசு தொழில்நுட்பமான கோவ்தேக் என்பது இலக்கவியல் அமைச்சின் ஒரு பகுதியாகும் என்று கோபிந்த் சிங் டியோ கூறினார். இதன் வழி மலேசியர்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களை எளிதாக அணுக உதவும்.
இது மலேசியாவை ஓர் இலக்கவியல் நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மலேசியர்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களுடன் இலகுவாகச் செயல்பட ஓரிட தலத்தை உருவாக்கியிருப்பது சிறப்பாகும்.
மைகோவ் மலேசியா திறன்பேசி அரசு தொழில்நுட்பச் செயலி மலேசியாவில் ஏழு முக்கிய சேவைகளில் கவனம் செலுத்தும். கடவுச்சீட்டு தொடர்பான விஷயங்கள், பிறப்பு மற்றும் குடியுரிமை, சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமம், மருத்துவச் சந்திப்புகள் மற்றும் மருத்துவப் பதிவுகள், அழைப்பாணைகள், வீட்டுவசதி, நில வரி மதிப்பீட்டு விகிதங்கள் மற்றும் ரஹ்மா ரொக்க உதவி ஆகியவற்றுக்கு முக்கியப் பங்காற்றும் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.