தம்பின், ஜூன்.24-
நெகிரி செம்பிலான் தம்பினில் இரு வியாபாரிகள், ஒரு மணி நேர வித்தியாசத்தில் 100 ரிங்கிட் கள்ள நோட்டைப் பெற்றதாக புகார் அளித்துள்ளனர்.
அருகில் உள்ள அப்பாம் பாலிக் வியாபாரியிடமிருந்து தனது மனைவி 100 ரிங்கிட் கள்ள நோட்டைப் பெற்றதாக 47 வயது வணிகர் ஹஸ்புல்லா முகமட் சாலே தெரிவித்தார்.
எனினும் தனது மூத்த மகளின் பிறந்த விழாவையொட்டி ஆர்டர் கொடுத்த கேக்கிற்கு அந்த 100 ரிங்கிட்டை செலுத்திய போதுதான், அது கள்ள நோட்டு என்பது தனது மனைவிக்குத் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதே போன்று ஆடவர் ஒருவரிடம் தாம் பெற்ற 100 ரிங்கிட், கள்ள நோட்டு என்பதைத் தாம் பின்னர்தான் உணர்ந்ததாக 21 வயதுடைய மற்றொரு வியாபாரியான மீரா என்பவர் தெரிவித்தார். பெரோடுவா மைவி ரகக் காரில் வந்த அந்த ஆடவரிடமிருந்து 100 ரிங்கிட் கள்ள நோட்டைத் தாம் பெற்றது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அவ்விரு வியாபாரிகளும் போலீசில் புகார் அளித்து இருப்பதை தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அமிருடின் சரிமான் உறுதிப்படுத்தியுள்ளார்.