ஜார்ஜ்டவுன், ஜூன்.25-
கடமையில் இருந்த போலீஸ்காரரை முஷ்டியினால் குத்தியதுடன், அவரின் நெஞ்சுப் பகுதியைக் கடித்துக் காயத்தை ஏற்படுத்தியதாக லோரி உதவியாளர் ஒருவர், ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
19 வயது S.R. ஐங்கரன் என்ற அந்த லோரி உதவியாளர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்ட போதிலும், அவரின் வாக்குமூலத்தை ஏற்க மாஜிஸ்திரேட் சித்தி நூருல் சுஹைலா பஹாரின் மறுத்து விட்டார்.
வழக்கில் ஆதாரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படவிருக்கும் புகைப்படங்களை அடையாளம் காணத் தவறி விட்டதைத் தொடர்ந்து அவரின் வாக்குமூலத்தை இப்போதைக்கு ஏற்க இயலாது என்று மாஜிஸ்திரேட் சித்தி நூருல் தெரிவித்தார்.
மது போதையில் இருந்ததாக நம்பப்படும் ஐங்கரன், கடந்த ஜுன் 22 ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் நுழைவாயில் சோதனைச் சாவடியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.