சிரம்பான், ஜூன்.26-
சைக்கிளைக் கவனக்குறைவாகச் செலுத்தி, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணம் விளைத்தக் குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறைத் தண்டனை விதித்தது.
56 வயது K. செல்வ நட்சத்திரம் என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நூருல் அஸுயின் முகமட் தல்ஹா இத்தண்டனையை விதித்தார்.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி பிற்பகல் 2.55 மணியளவில் சிரம்பான், தாமான் டேசா அங்கேரிக், பசார் ராயா முன்புறம், செல்வ நட்சத்திரம் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சாலைச் சந்திப்பில் வளையக்கூடாத பகுதியில் செல்வ நட்சத்திரம் தனது சைக்கிளைத் திருப்பியதால், எதிரே வந்த 28 வயது மோட்டார் சைக்கிளோட்டி, தடுமாறிய நிலையில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.