சிலாங்கூர் கேபிடிஎன் 12 நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட வளாகங்களில் அதிரடிச் சோதனை

ஷா ஆலாம், ஜூன்.26-

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான கேபிடிஎன்னின் சிலாங்கூர் மாநிலக் கிளை, கித்தா கெம்பூர் பிரச்சார நடவடிக்கையின் வாயிலாக பயனீட்டாளர்களைப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது.

மிக நெருக்கமான சில்லறை விற்பனை மட்டத்திலும் பயனீட்டாளர்களைப் பாதிக்கக்கூடிய அம்சங்களிலும் தீவிர கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக தனது அமலாக்க நடவடிக்கைகளை முழு வீச்சில் கேபிடிஎன் விரிவுப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜுன் 25 ஆம் தேதி சிலாங்கூர் மாநில கேபிடிஎன் அமலாக்க அதிகாரிகள் ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கோம்பாக், காஜாங், சிப்பாங், கோலா குபு பாரு மற்றும் கோலா சிலாங்கூர் உள்ளிட்ட கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் கித்தா கெம்பூர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

சுமார் 12 மணி நேரத்தில் 1,405 கடைகள் மற்றும் வர்த்தகத் தளங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக அது ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

மக்களின் அத்தியாவசியப் பொருட்களான ஒரு கிலோ எடை கொண்ட சமையல் பாக்கெட் எண்ணெய், சீனி, முட்டை, டின்னில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் முதலியவை விலை உயர்த்தப்பட்டுள்ளனவா? அப்பொருட்கள் பதுக்கப்படுகின்றனவா? என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS