சொகுசு வாகனத்தை அன்பளிப்பாகப் பெற்றதாக மேலவையின் முன்னாள் துணைத் தலைவர் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, ஜூன்.26-

அன்பளிப்பு என்ற பெயரில் ரேஞ் ரோவர் ஸ்போர்ட் சொகுசு வாகனத்தை லஞ்சமாகப் பெற்றதாக மேலவையின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் அலி முகமட், இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

61 வயது முகமட் அலி, மலாக்காவில் தாம் பிரதிநிதிக்கும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் சொகுசு வாகனத்தை லஞ்சமாகப் பெற்றதாக நீதிபதி எலிசபெட் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மலாக்காவில் கடல் நில மீட்புத் திட்டத்தில் கடல் மணல் சேகரிக்கும் பகுதியில் மணல் அகற்றும் பணிகளுக்கானக் குத்தகையை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்றை நியமித்தது மூலம் அதற்குக் கைமாறாக சொகுசு வாகனம் ஒன்றைப் பெற்றதாக முகமட் அலி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பெறப்பட்ட லஞ்சப் பணத்திற்கு நிகராக பத்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் மேலவைத் துணைத் தலைவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து முகமட் அலி விசாரணை கோரியதால், ஏற்கனவே மற்றொரு லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அவருக்கு அனுமதிக்கப்பட்ட 60 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகை, இந்த வழக்கிலும் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

WATCH OUR LATEST NEWS