கூச்சிங், ஜூன்.26-
சரவாக், பெட்ரா ஜெயாவில் ஸ்குவாஷ் அரங்கில் நடைபெற்ற ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிபை வெல்லும் தேசிய இணையின் எண்ணம் ஈடேறவில்லை. இறுதிப் போட்டியில் மலேசியப் பிரதிநிதிகளான யீ சின் யிங்கும் ஐநா அமானியும் இந்திய ஜோடியிடம் தோல்வி கண்டனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான அவ்வாட்டத்தில், இந்திய ஜோடியான ஜோஷனா சின்னப்பா மற்றும் அஹனத் சிங், முதல் செட்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு, 35 நிமிடங்கள் கடுமையாகப் போராடி வென்றனர்.
ஆட்டம் 8-11, 11-9, 11-10 என்ற கணக்கில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்தியா சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
அற்புதமாகத் தொடங்கிய மலேசிய இணையினரால், கடைசி இரண்டு செட்களில் தங்கள் எதிரிகளின் எழுச்சியைத் தடுக்க முடியவில்லை.
கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங்குடன் இணைந்து விளையாடிய அஹனத் சிங், தேசிய ஜோடியான ரேச்சல் அர்னால்ட் மற்றும் அமீஷன்ராஜ் சந்திரனை 28 நிமிடங்களில் 11-9, 11-7 என்ற நேர் செட்களில் தோற்கடித்தனர். அதன் வழி, கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.