பல்கலைக்கழக மாணவியைக் கொன்ற சந்தேகப் பேர்வழி அவருக்கு அறிமுகமானவரே

சிப்பாங், ஜூன்.26-

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுரைக் கொன்றச் சந்தேகப் பேர்வழி, அவருக்கு நன்கு அறிமுகமான நபராக இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

20 வயது மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் அவர் தங்கியிருந்த கொண்டோமினியம் வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த வீட்டிற்குள் வெளியாட்கள், அத்துமீறி நுழைந்தற்கான எந்தவொரு தடயங்களும் இல்லை என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

தனிமையில் இருந்ததாக நம்பப்படும் அந்தப் பெண் தாங்கியிருந்த வீட்டின் இரும்புக் கேட் வெட்டப்பட்டோ அல்லது பிரதான கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.

போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில், இந்த கொலையைப் புரிந்த சந்தேகப் பேர்வழி அவரின் வீட்டிற்கு வந்து இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதே வேளையில் அந்தப் பெண் தலையிலேயே அடித்துக் கொன்றப் பின்னர் அவரின் ஏடிஎம் கார்டுகள் உட்பட சில உடமைகள் காணாமல் போனதாக நம்பப்படுகிறது. இது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வரும் வேளையில் சந்தேகப் பேர்வழியைப் பிடிப்பதற்கான வலை சுருங்குகிறது என்று ஏசிபி நோர்ஹிஸாம் குறிப்பிட்டார்.

சரவாக் கூச்சிங்கைச் சேர்ந்த மனிஷாபிரிட் கவுர், தான் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது காலை 10.28 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மாணவியின் தலையிலேயே, கூர்மையான பொருளைக் கொண்டு தாக்கப்பட்டதாக சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS