சிரம்பான், ஜூன்.27-
சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதியில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளுக்குத் தாம் ஒதுக்கக்கூடிய வருடாந்திர மானியங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செளகரியமான சூழலில் கற்றல் கற்பித்தலுக்குரிய வசதிகளை மேம்படுத்திக் கொள்வது இலக்காக இருக்க வேண்டும் என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

தமிழ்ப்பள்ளிகள் உட்பட தாய்மொழிப்பள்ளிகள் தரமான சூழலில் அதன் அடிப்படை தேவைகள் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய மானியங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதை பள்ளி நிர்வாகம் உறுதிச் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

ஒரு பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய மானியங்கள், எந்த நோக்கத்திற்காக அந்த தொகைப் பெறப்படுகின்றதோ, அவற்றின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும். அந்தப் பள்ளிக்கு நேரடியாக வருகை புரியும் போது, அதன் விளைப் பயணம் காணக்கூடிய சூழல் இருக்க வேண்டும்.

அந்த வகையில் சிரம்பான், லோபாக் தமிழ்ப்பள்ளியில், கூரையின்றி, சமத் தரையின்றி இருந்த மாணவர்கள் ஒன்று கூடும் இடம், இன்று அழகான கூரை வசதியுடன் ஒரு மண்டபத்தைப் பெற்று இருக்கிறது என்றால், ஒதுக்கப்பட்ட மானியம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சூழலையே சிரம்பானில் உள்ள 6 பள்ளிகளிலும் காணத் தாம் விரும்புவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இன்று சிரம்பான் லோபாக் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 6 தமிழ்ப்பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் ரிங்கிட் மானியத்தை பிரித்துக் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்தோணி லோக் மானியத்திலிருந்து 6 பள்ளிகள், தங்கள் பள்ளிச் சீரமைப்பு, தளவாட மற்றும் ஐசிடி பொருட்கள் வாங்குவதற்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

லோபாக் தமிழ்ப்பள்ளிக்கு 86 ஆயிரத்து 280 ரிங்கிட், லெங்கேங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 33 ஆயிரத்து 460 ரிங்கிட் மானியம், மந்தின் கேய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 63 ஆயிரத்து 950 ரிங்கிட் மானியம், நீலாய் இம்பியான் தமிழ்ப்பள்ளிக்கு 42 ஆயிரத்து 900 ரிங்கிட் மானியம், பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிக்கு 69 ஆயிரத்து 467 ரிங்கிட் மானியம், நீலாய் தமிழ்ப்பள்ளிக்கு 66 ஆயிரத்து 415 ரிங்கிட் மானியம் என 6 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களிடம் அந்தோணி லோக் மாதிரி காசோலைகளை ஒப்படைத்தார்.

6 தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது குறித்து கருத்துரைத்த சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நீலாய் சட்டமன்ற உறுப்பினர் J. அருள்குமார், இந்த மானியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்கள் தேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் வாரிய உறுப்பினர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
