கோலாலம்பூர், ஜூன்.27-
தீவிரவாதத்திற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 36 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வங்களதேசிகள், தீவிரவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த 36 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்டப் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கையை போலீசார் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி, சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தினர். இதில் 36 வங்களதேசிகள் பிடிபட்டனர்.
இவர்கள் அனைவரும் இஸ்லாமிக் ஸ்டேட் சிந்தாந்தத்தைக் கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஐவர், ஷா ஆலாம் மற்றும் ஜோகூர் பாரு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டனர். இதர 15 பேர், நாட்டை விட்டு வெளியேற்ற அனுமதி பெறப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இன்னும் 16 வங்காளதேசிகள் தடுக்கப்பட்டு, அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.