கோலாலம்பூர், ஜூன்.28-
மலேசிய ஆயுதப் படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பு இன்னமும் குறைவாகவே உள்ளதாக ஆயுதப் படையின் தளபதி டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.
பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பு, விழுக்காடு ரீதியாக மிகக் குறைவாக இருப்பது, புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது என்று டான் ஶ்ரீ முகமட் நிஸாம் குறிப்பிட்டார்.
ஆயுதப் படை என்பது இதரத் துறைகளை விட முற்றிலும் மாறுபட்டதாகும். நிபுணத்துவம் வாய்ந்ததாகும். இத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
ஆயுதப் படையில் பூமிபுத்ரா சமூகத்திற்கு அப்பாற்பட்டு, இதர இனத்தவர்களும் அதிகளவில் இணைய வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக டான் ஶ்ரீ முகமட் நிஸாம் வலியுறுத்தினார்.
இன்று கோலாலம்பூர் சுங்கை பீசியில் கேம் பெர்டானாவில் ஆயுதப்படையின் கேடெட் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்குதல் மற்றும் அணிவகுப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.