கோலாலம்பூர், ஜூன்.28-
தனது அரசியல் பயணத்தில் Malays First எனும் முதலில் மலாய்க்காரர்களே எனும் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
தம்முடைய நிலைப்பாட்டில் முன்பும் எந்த மாற்றமும் இல்லை, தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. அந்த கோட்பாட்டிலும், கொள்கையிலும் தாம் உறுதியாக இருப்பதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார்.
முதலில் மலாய்க்காரர்களே என்று என்னுடைய முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் சொன்னேரே தவிர மலேசியர்களை நான் இரண்டாவது இடத்தில் வைத்துப் பார்க்கிறேன் என்று நான் எப்போதும் சொன்னதில்லை என்று முகைதீன் வாதிட்டார்.
தற்போது இவ்வாறு கூறும் முகைதீன் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தியர் ஒற்றுமை விழாவில் ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றுகையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அனைத்து சமூகத்திற்கும் நியாயமாகவும், நேர்மையாக நடந்து கொள்வதற்கானக் கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறிவித்து இருந்தார்.
தாம் ஒரு மலாய்க்கார மலேசியராக இருந்த போதிலும் தமது சிந்தனை எப்போதுமே மலாய்க்காரர்களைப் பற்றி மட்டுமே இருந்ததில்லை என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.