ஜெர்தே, ஜூன்.29-
விடுமுறை நாட்களில் மாணவர்கள் சுயமாக வாடகைக்கு எடுத்துச் செல்லும் பேருந்துப் பயணங்களை உயர்கல்வி நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடீர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று, பேரா, கெரிக் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 உப்சி மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து, இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, பல்கலைக்கழகங்கள் இத்தகையப் பயணங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றார் அமைச்சர். குறிப்பாக, இனி மாணவர்கள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்து, பகல் நேரத்தில் மட்டுமே பயணிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் யோசனை கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் பரிந்துரைகளை அமைச்சு கவனமாகப் பரிசீலித்து வருகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் எந்தவொரு துயரமான சம்பவத்தையும், குறிப்பாக உயிரிழப்புகளை, விரைவாகவும் முழுமையாகவும் கையாள்வதில் அமைச்சு உறுதிப் பூண்டுள்ளது என்றார் அவர்.