கோலாலம்பூர், ஜூன்.30-
நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக் காலத்தை நீட்டிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எழுந்துள்ள கோரிக்கை தொடர்பான அறைகூவல்களை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடினார்.
இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் துறையில் ஆற்றிய உரையில், தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்கச் சொல்லும் நடவடிக்கையானது, நீதித்துறையை அரசியலாக்குவதற்கான முயற்சி என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் செயல்படும் நீதித்துறை பரிபாலனத்தின் மீது, இத்தகைய வலியுறுத்தல்கள் கூடாது என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
அரசு ஊழியர்கள் அல்லது நீதிபதிகள், ஓய்வு பெறும் வயதை அடையும் எந்த அதிகாரிக்கும், அவர்களுக்கென்று சொந்த நடைமுறைகள் உள்ளன. ஓய்வு பெறும் வயது என்றால் அவர்கள் தானாக ஓய்வு பெற வேண்டும் என்பதும் அல்ல, தானாகவே அதனைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.
இதன் பொருள், சுயேட்சையாக மற்றும் சுதந்திரமாக இருக்க வேண்டிய நீதிபரிபாலனத்துறை, அரசியலாக்ப்பட்டு வருகிறது. அது ஒரு பொது அரசியல் விவாதமாக மாறி வருகிறது என்று பிரதமர் சாடினார்.