கோலாலம்பூர், ஜூன்.30-
அரச மலேசிய போலீஸ் படையில் பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் சிஐடி இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையினுக்கு மலேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பது ஓர் உயரிய அங்கீகாரமாகும் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் புகழாரம் சூட்டினார்.
போலீஸ் படையில் மிகுந்த நம்பிக்கைக்குரிய ஓர் உயர் அதிகாரியாக பார்க்கப்படும் ஷுஹைலியின் திறன், ஆற்றல், தூய்மை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலேயே நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்த உயரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐஜிபி விளக்கினார்.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பதவி ஒப்படைப்புக்கானச் சடங்கின் போது காலிட் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஹாக்கி விளையாட்டின் முன்னாள் வீரரான ஷுஹைலி இதற்கு முன்பு பினாங்கு மற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார்.