புதிய ஆதாரங்களைச் சமர்பிப்பதற்கு ஓம்ஸ் தியாகராஜனுக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல தொழில் அதிபர் ஓம்ஸ் தியாகராஜனுக்கு எதிரான தண்டனையை ரத்து செய்வதற்கு ஏதுவாக, புதிய ஆதாரங்களை முன் வைப்பதற்கு அவர் செய்துக்கொண்டுள்ள மேல் முறையீட்டு விண்ணப்பத்திற்கு புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தியாகராஜன் பாவாடை என்ற இயற்பெயர் கொண்ட 69 வயதான ஓம்ஸ் தியாகராஜன், தமது மேல் முறையீட்டில், சட்டம் தொடர்பாக முன்வைத்துள்ள 7 கேள்விகளுக்கு விடைக்காணும் வகையில், அவரின் மேல் முறையீட்டு விண்ணப்பத்தை அனுமதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதி குழுவிற்குத் தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹனிபா ஃபரிகுல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ஷா ஆலாம் செக்‌ஷன் 25 இல் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் ஷா ஆலாம் மாநகர் மன்றத்தின் பெண் அதிகாரி ரொஹானா பகாரியின் பணிக்கு இடையூறு விளைவித்து, குற்றவியல் தன்மையிலான பலவந்தத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக ஓம்ஸ் தியாகராஜனுக்கு ஷா ஆலாம் மஜீஸ்திரேட் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டைனையும், 8 ஆயிரம் வெள்ளி அபராதத்தையும் விதித்தது.

இத்தண்டனையை எதிர்த்து ஓம்ஸ் தியாகராஜன், ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் செய்துக்கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பம், கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் காஜாங் சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டு, நவம்பர் 21 ஆம் தேதி வரை சிறையில் வைக்கப்பட்டார்.

தமக்கு எதிரான சிறைத் தண்டனையை எதிர்த்து ஓம்ஸ் தியாகராஜன் அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனை, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இவ்வழக்கில் ஓம்ஸ் தியாகராஜன் சார்பில் பிரபல வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரம், கோபிந்த் சிங் டியோ, எஸ். பிரகாஷ் மற்றும் மிகுவல் செக்வெரா ஆஜாராகினர்.

WATCH OUR LATEST NEWS