பி.பி.ஆர். வீடுகளின் பரப்பளவு 1,000 மாக மாற்றியமைக்கும்படி வலியுறுத்து.

பத்து பேர் கொண்ட பெரிய குடும்பங்கள், குடியிருப்பதற்கு ஏதுவாக பி.பி.ஆர் எனப்படும் பொது அடுக்குமாடி குடியிருப்புப்பகுதிகளில் ஒவ்வொரு வீடும் தற்போது உள்ள 700 அடி பரப்பளவிலிருந்து 1,000 அடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜெஃப்ரி பாங் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரும்பாலான குடும்பங்கள் 3-லிருந்து 6 உறுப்பினர்களைக் கொண்டவர்களாகவும், 14 சதவீத குடும்பங்கள் நெருக்கடியான சூழலில், 2-க்கும் மேற்பட்டோர் உள்ள குடும்பத்தினர் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டு வாழும் நிலையிலும் இருப்பதாக மைய்பிஜே சமூக அமைப்பின் தலைவருமான ஜெஃப்ரி பாங் குறிப்பிட்டார்.

கெஆர்.ஐ எனப்படும் கருவூல ஆய்வியல் கழகத்தின் ஆய்வின்படி தற்போது 700 அடி பரப்பளவில் உள்ள பி.பி.ஆர் பொது குடியிருப்புப்பகுதிகள், குடும்பங்களுக்கு இனியும் ஏற்புடையதாக இருக்காது என்று அறிவித்து இருப்பதை ஜெஃப்ரி பாங் சுட்டிக்காட்டினார்.

ஆயிரம் அடியாக மாற்ற இயலாவிட்டாலும் குறைந்த பட்சம் 800 அடியாக இட வசதி அதிகரிக்கப்பட்டு, நடப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஜெஃப்ரி பாங் பரிந்துரை செய்துள்ளார்.

முறையான, சரி சமமான இடஒதுக்கீட்டை ஊக்குவிக்கும் திங்க் சிட்டி எனும் அமைப்பின் நிர்வாகி ஹம்தான் அப்துல் மஜீத், கூறுகையில் பி.பி.ஆர் பொது வீடமைப்புப் பகுதிகளைக் கட்டுவதற்குத் திட்டமிடும் போதே ஒவ்வொரு வீட்டின் குறைந்த பட்ச அளவு என்ற நிலையில்லாமல் நடுத்தர அளவிலான வீடுகளை நிர்மாணிப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் கேட்டுக்கொண்டார்.

இது குடியிருப்பாளர்களின் மனம், உடல் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கும் ஏற்ற ஒரு வசிப்பிடமாக இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதுடன் அத்தகைய சூழல் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உத்ரவாதமளிப்பதாக இருக்க முடியும் என்று ஹம்தான் அப்துல் மஜீத் பரிந்துரை செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS